அவர் ‘மனிதரின் இதயங்களை அறிந்திருக்கிறார்!’
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
அவர் ‘மனிதரின் இதயங்களை அறிந்திருக்கிறார்!’
பிரச்சினைகளும் துன்பங்களும் இன்று யாரைத்தான் விட்டுவைக்கின்றன? நம் இதயத்தின் வேதனைகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ள யாருமே இல்லை என்று நாம் சில சமயம் நினைக்கலாம். ஆனால், நம் உள்ளத்தின் உணர்வுகளை ஒருவர் மட்டும் முழுமையாகப் புரிந்துகொள்கிறார்; அவர்தான் கடவுளாகிய யெகோவா. அதைப் பற்றி 2 நாளாகமம் 6:29-31-ல் நாம் வாசிக்கிறோம். அதில் பதிவாகியுள்ள சாலொமோனின் வார்த்தைகளைப் படிக்கும்போது நம் மனதுக்கு இதமாய் இருக்கிறது.
வருடம்: கி.மு. 1026. இடம்: எருசலேம் நகரம். சம்பவம்: ஆலயத் திறப்பு விழா. அந்தச் சந்தர்ப்பத்தில் கடவுளிடம் சுமார் பத்து நிமிடம் சாலொமோன் பிரார்த்தனை செய்தார். யெகோவா உண்மையுள்ளவர்... வாக்குத் தவறாதவர்... பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பவர்... என்றெல்லாம் சொல்லி அவரைப் புகழ்ந்தார்.—1 இராஜாக்கள் 8:23-53; 2 நாளாகமம் 6:14-42.
மக்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டருளும்படி கடவுளிடம் சாலொமோன் கெஞ்சினார். (வசனம் 29) மக்கள் பொதுவாகப் படும் கஷ்டங்களை முதலில் பட்டியலிட்டார் (வசனம் 28); பின்பு, அவரவர் ‘வாதையும்’ அவரவர் ‘வியாகுலமும் [அதாவது, இதயத்தின் வேதனையும்]’ அவரவருக்குத் தெரியும் என்று சொன்னார். ஏனென்றால், ஒருவருக்கு ஒரு விதமான பிரச்சினை இருக்கலாம், இன்னொருவருக்கு இன்னொரு விதமான பிரச்சினை இருக்கலாம்.
ஆனால் கடவுள்-பயம் உள்ளவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களாகவே சமாளிக்க வேண்டியதில்லை; ஆம், தங்கள் பாரங்களைத் தனியாகச் சுமக்க வேண்டியதில்லை; யெகோவாவின் உதவியை நாடலாம். சாலொமோன் பிரார்த்தனை செய்தபோது, “கைகளை விரித்து” மனதுருகி விண்ணப்பம் செய்த ஒரு நபரைத் தன் மனதில் நினைத்திருக்கலாம். a ஒருவேளை அவருடைய அப்பா தாவீது துன்பத்தில் துவண்டுபோயிருந்த சமயத்தில் சொன்ன வார்த்தைகள்... அதாவது, “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு” என்ற வார்த்தைகள்... சாலொமோனின் மனதிற்கு வந்திருக்கலாம்.—சங்கீதம் 55:4, 22.
சரி, உதவி கேட்டு மனதுருகி விண்ணப்பம் செய்வோருக்கு யெகோவா எப்படிப் பதிலளிப்பார்? ‘உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் [மக்களின் விண்ணப்பங்களை] கேட்டு மன்னித்து, அவரவர் செயல்களுக்கேற்ற பயனை அளிப்பீராக!’ என்று சாலொமோன் மன்றாடினார். (வசனம் 30; NW) ‘ஜெபத்தைக் கேட்கிற’ கடவுள், மக்களை மொத்தமாகவும் கவனித்துக்கொள்கிறார், தனித்தனியாகவும் கவனித்துக்கொள்கிறார் என்பதை சாலொமோன் அறிந்திருந்தார். (சங்கீதம் 65:2) ஆம், அவர்களுக்குத் தேவையான உதவிகளை யெகோவா அளிக்கிறார்; தவறு செய்தவர் உண்மையாக மனந்திரும்பும்போது மன்னிப்பும் அளிக்கிறார்.—2 நாளாகமம் 6:36-39.
மனந்திரும்பும் நபரின் விண்ணப்பங்களுக்கு யெகோவா செவிசாய்ப்பார் என்பதில் சாலொமோன் ஏன் அவ்வளவு நம்பிக்கையாய் இருந்தார்? “ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் [யெகோவா] அவரவர் செயல்களுக்கேற்ற பயனை அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்!” (பொது மொழிபெயர்ப்பு) என்று அவரே சொன்னார். தமது மக்கள் ஒவ்வொருவருடைய துன்பத்தை அல்லது இதயத்தின் வேதனையை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார்; ஆம், அவர்களுக்கு வேதனை என்றால் அவருக்கும் வேதனைதான்!—சங்கீதம் 37:4.
சாலொமோனின் பிரார்த்தனை நமக்கு ஆறுதலின் அருமருந்தாய் இருக்கிறது. நம் உள்ளத்தின் உணர்வுகளை, ஆம், நம்முடைய துன்பத்தையும் ‘மனவேதனையையும்’ மற்றவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல்போகலாம். (நீதிமொழிகள் 14:10) ஆனால், நம் மனதின் ஏக்கங்கள் என்னவென்று யெகோவாவுக்குத் தெரியும்; அவருக்கு நம்மீது மிகுந்த அக்கறை இருக்கிறது. நம் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டின பிறகு நம் மனப்பாரம் குறைந்துவிடும். அதனால்தான், “உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், ‘அவர் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்.’—1 பேதுரு 5:7. (w10-E 12/01)
[அடிக்குறிப்பு]
a அந்தக் காலத்தில், ‘கைகளை விரிப்பது,’ அதாவது இரு கைகளையும் வானத்தை நோக்கி நீட்டுவது, ஜெபம் செய்வதற்கு அடையாளமாக இருந்தது.—2 நாளாகமம் 6:13.