Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒற்றைப் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருங்கள்

ஒற்றைப் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருங்கள்

ஒற்றைப் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருங்கள்

சாதாரணமாக எல்லாரையும்விட ஒற்றைப் பெற்றோருக்குப் பொறுப்புகள் அதிகம். அதனாலேயே அவர்களுக்குப் போதுமான சமயமும் இருப்பதில்லை, உடம்பில் சக்தியும் இருப்பதில்லை. அவர்கள் எதிர்ப்படுகிற சவால்களுக்குக் கணக்கே இல்லை. குடும்பத்தைக் கட்டிக்காப்பதென்றால் லேசான விஷயமா? வெளியில் போய்ச் சம்பாதிக்க வேண்டும், கடைக்குப் போக வேண்டும், சமைக்க வேண்டும், வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும், பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும். கூடவே, பிள்ளைகளின் ஆரோக்கியத்தைக் கவனிக்க வேண்டும், அவர்களோடு பேச... விளையாட... நேரம் ஒதுக்க வேண்டும், அவர்களுடைய உணர்ச்சிப்பூர்வ தேவைகளை நிறைவேற்ற வேண்டும்; மிச்சமீதி நேரம் இருந்தால் தங்களுடைய காரியங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒற்றை-பெற்றோர் குடும்பங்கள் இன்று புற்றீசல்போலப் பெருகிவருகின்றன, சமுதாயத்தில் சகஜமாகிவருகின்றன; என்றாலும், அவர்களைப் பெரும்பாலும் மக்கள் கண்டுகொள்வதில்லை. ஒரு தாயின் எதார்த்தமான வார்த்தைகள் இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. அவர் சொன்னதாவது: “நான் தனிமரமாய் நின்றபோதுதான் ஒற்றைப் பெற்றோரின் கஷ்டங்களை முழுமையாகப் புரிந்துகொண்டேன்.” அப்படியானால், ஒற்றைப் பெற்றோருக்கு நீங்கள் எப்படி ஒத்தாசையாக இருக்கலாம்? அவர்கள்மீது நீங்கள் ஏன் கரிசனை காட்ட வேண்டும்? மூன்று காரணங்களை இப்போது சிந்திக்கலாம்.

கரிசனை காட்டக் காரணங்கள்

பெரும்பாலான ஒற்றைப் பெற்றோர் உதவிக்காக ஏங்குகிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான 41 வயது விதவை இவ்வாறு சொன்னார்: “சில சமயம் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடுகிறேன். என் தலையில் விழுந்த பொறுப்புகளையெல்லாம் எப்படித்தான் நிறைவேற்றப்போகிறேனோ என நினைத்து இடிந்துபோய் உட்கார்ந்துவிடுகிறேன்.” ஓர் அபலைத் தாய், “இதற்குமேல் எங்களால் தாக்குப்பிடிக்கவே முடியாது; எங்களுக்கு யாராவது உதவிசெய்தால் நன்றாக இருக்கும்!” என்று புலம்பினார். கணவனை இழந்துவிடுகிற... கைவிடப்படுகிற... இன்னும் பிற சவால்களை எதிர்ப்படுகிற... அநேக ஒற்றைப் பெற்றோர் இவருடைய குரலையே எதிரொலிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவினால் நீங்கள் ஆனந்தமடைவீர்கள்! தனியாகத் தூக்க முடியாத பாரத்தை ஒருவர் தூக்கி வருவதைப் பார்த்து நீங்கள் எப்போதாவது உதவிக்கரம் நீட்டியிருக்கிறீர்களா? அப்படிச் செய்திருந்தால், சரியான சமயத்தில் உதவி செய்த திருப்தியை அடைந்திருப்பீர்கள். அவ்வாறே, தனிமரமாய் நிற்கிற ஒற்றைப் பெற்றோரும் தனியாகச் சுமக்க முடியாத பொறுப்புகளைச் சுமக்கிறார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் உதவிக்கரம் நீட்டினால்... சங்கீதம் 41:1-ல் (NW) சொல்லப்பட்டுள்ள பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என உணருவீர்கள்: “எளியோருக்கு உதவி செய்பவன் ஆனந்தம் அடைவான்.”

கடவுளும் பிரியப்படுவார். “துன்பப்படுகிற அநாதைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்வதும், இந்த உலகத்தால் கறைபடாதபடி நம்மைக் காத்துக்கொள்வதுமே நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, மாசில்லாத வணக்க முறையாகும்” என்று யாக்கோபு 1:27 சொல்கிறது. ஒற்றைப் பெற்றோரைக் கவனித்துக்கொள்வதும் இதில் அடக்கம். a “நன்மை செய்யவும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடாதீர்கள்; இப்படிப்பட்ட பலிகளில் கடவுள் பிரியமாயிருக்கிறார்” என்று எபிரெயர் 13:16 சொல்கிறது.

இந்த மூன்று காரணங்களை மனதில் வைத்துக்கொண்டு, ஒற்றைப் பெற்றோருக்கு நீங்கள் என்னென்ன உதவிகளைச் செய்யலாம்... அவ்வாறு செய்யும் உதவிகள் உண்மையிலேயே அவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்குமென்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்... என்பதைக் குறித்து இப்போது ஆராயலாம்.

அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ளுங்கள்

“உங்களுக்கு நான் என்ன உதவி செய்யட்டும்?” இப்படி அவர்களிடம் நேரடியாகக் கேட்டால் போதும்... அவர்கள் தங்களுக்கு என்ன தேவை எனச் சொல்லிவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்படிக் கேட்கும்போது பெரும்பாலும் அவர்கள் ‘எங்களுக்கு இது வேண்டும், அது வேண்டும்’ என வாய்திறந்து சொல்ல மாட்டார்கள். அதனால்தான், ‘உதவி செய்யும்படி’ சங்கீதம் 41:1 பரிந்துரைக்கிறது. இந்த வார்த்தைக்கான எபிரெய பதம், “மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் ஒரு விஷயத்திற்கு அதிக கவனம் தந்து, அதனால் ஒரு நன்மை விளைவதற்கு வழி செய்வதை” அர்த்தப்படுத்துவதாக ஒரு புத்தகம் விளக்குகிறது.

ஆகவே, ஒற்றைப் பெற்றோருக்கு நீங்கள் செய்கிற உதவி மிகவும் பிரயோஜனமாய் இருக்க... அவர்கள் எதிர்ப்படுகிற சவால்களைக் குறித்து ஆழ்ந்து யோசியுங்கள். அவர்களுடைய சூழ்நிலையை மேலோட்டமாகப் பார்க்காமல், சற்றுக் கூர்ந்து கவனியுங்கள். ‘நான் அந்தச் சூழ்நிலையில் இருந்திருந்தால்... என்ன மாதிரி உதவிகள் எனக்குத் தேவைப்பட்டிருக்கும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அநேக ஒற்றைப் பெற்றோர் சொல்கிறபடி, என்னதான் யோசித்து யோசித்துப் பார்த்தாலும் அவர்களுடைய சூழ்நிலைகளை உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; நீங்கள் ஓர் ஒற்றைப் பெற்றோராக இருந்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். என்றாலும், அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்க்க முடிந்தளவு முயற்சி செய்தீர்களென்றால், அவர்களுக்குப் பிரயோஜனமான ‘உதவிகளைச் செய்ய’ உங்களால் முடியும்.

கடவுளின் ஆதர்ச முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்

ஒற்றைப் பெற்றோரை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் இதுவரை யாருமே கடவுளாகிய யெகோவாவை மிஞ்சியதில்லை. திக்கற்ற பிள்ளைகளிடமும் விதவைகளிடமும் அவர் கனிவோடும் கரிசனையோடும் நடந்துகொண்டதாக பைபிளிலுள்ள அநேக வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன; அப்படியென்றால், ஒற்றைப் பெற்றோருக்கும் அவர் கரிசனை காட்டியிருப்பார் என்றுதானே அர்த்தம்! அவ்வாறு திக்கற்ற நிலையில் இருப்போருக்கு உதவுவதற்காகக் கடவுள் செய்த ஏற்பாடுகளைக் குறித்து ஆழ்ந்து படித்தோமென்றால்... பிரயோஜனமான உதவிகளை, நடைமுறையான உதவிகளை எப்படி அளிக்கலாம் என்பதைக் குறித்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வோம். இது சம்பந்தமாக நான்கு அம்சங்களை இப்போது சிந்திப்போம்.

அவர்கள் பேசுவதைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள்

ஏழை எளியோரின் ‘முறையிடுதலை [அதாவது, “அழுகுரலை,” பொது மொழிபெயர்ப்பு] நான் நிச்சயமாய்க் கேட்பேன்’ எனத் திருச்சட்டத்தில் யெகோவா குறிப்பிட்டிருந்தார். (யாத்திராகமம் 22:22, 23) அவருடைய அருமையான முன்மாதிரியை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்? ஒற்றைப் பெற்றோர் படும் அவஸ்தையைச் சற்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய மனதின் ஆதங்கத்தைக் கொட்டுவதற்கு பெரும்பாலும் அவர்களுக்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்பதால் தனிமையில் தவிப்பார்கள். “பிள்ளைகள் தூங்கப்போன பிறகு சில சமயங்களில் தனிமை உணர்வு என்னை ஆட்டிப்படைக்கும்; அப்போதெல்லாம் அழுகையை என்னால் அடக்கவே முடியாது” என்று சொல்லிப் புலம்புகிறார் ஒரு தாய். உங்களால் முடிந்தால், ஓர் ஒற்றைப் பெற்றோரின் ‘அழுகுரலைக் கேட்பதற்கு,’ அதாவது அவருடைய மனதின் ஆதங்கத்தைக் கேட்பதற்கு நேரம் ஒதுக்க முடியுமா? சரியான சூழ்நிலைகளில் அப்படிச் செய்தீர்களென்றால், ஒற்றையாய்க் குடும்பத்தைக் கட்டிக்காப்பதில் உள்ள சவால்களைச் சமாளிக்க அது அவர்களுக்கு ரொம்பவே உதவியாய் இருக்கும்.

ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள்

வழிபாட்டு சமயங்களில் இஸ்ரவேலர் பாடுவதற்காக யெகோவா தம் சக்தியை அருளிப் புனிதப் பாடல்களை... அதாவது சங்கீதங்களை... இயற்றச் செய்தார். இஸ்ரவேலர் மத்தியில் இருந்த திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் யெகோவா ‘தகப்பனாகவும்,’ ‘நியாயம் விசாரிக்கிறவராகவும்’ இருந்து நிம்மதி அளிப்பார் என்பதை அந்தப் பாடல்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தின; அவற்றைப் பாடியபோதெல்லாம் அவர்கள் எந்தளவு ஆறுதல் அடைந்திருப்பார்கள்! (சங்கீதம் 68:5; 146:9) அவ்வாறே நாமும், ஒற்றைப் பெற்றோருக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லலாம்; அதை அவர்கள் காலங்காலமாய் நினைத்துப் பார்ப்பார்கள். ரூத் என்ற ஒற்றைத் தாயின் உதாரணத்தைக் கவனியுங்கள். அனுபவம் வாய்ந்த ஒரு தகப்பன் அவரிடம், “உங்கள் பையன்களை நன்றாக வளர்க்கிறீர்கள், பார்ப்பதற்குச் சந்தோஷமாய் இருக்கிறது!” என்று சொன்னார். 20 வருடங்களுக்கு முன் அவர் பாராட்டியதை நினைத்து ரூத் இன்றும் சந்தோஷப்படுகிறார். “அந்தச் சகோதரர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ரொம்பவே தெம்பளித்தது” என்கிறார். ஆம், ‘நல்வார்த்தை இருதயத்துக்கு மகிழ்ச்சி அளிக்கும்’; ஆகையால், ஒற்றைப் பெற்றோருக்கு ஆறுதலாக நாம் சொல்கிற வார்த்தைகள், நாம் நினைத்துப் பார்ப்பதைவிடப் பன்மடங்கு பலன் தரலாம். (நீதிமொழிகள் 12:25) அப்படியானால், குறிப்பாக என்ன சொல்லி ஓர் ஒற்றைப் பெற்றோரை நெஞ்சாரப் பாராட்டுவீர்கள்?

தேவையான பொருளுதவியை அளியுங்கள்

திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கண்ணியமான விதத்தில் தந்து உதவுவதற்கான ஏற்பாடுகள் பூர்வ இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்தன. அந்த மாதிரியான ஏற்பாடுகள் இருந்ததாலேயே அவர்களால் வயிறார ‘சாப்பிட்டுத் திருப்தியடைய முடிந்தது.’ (உபாகமம் 24:19-21; 26:12, 13) நாமும்கூட, நமக்குத் தெரிந்த ஒற்றை-பெற்றோர் குடும்பத்தினர் கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்குப் பொருளுதவி அளிக்கலாம்; ஆனால் அதைக் கண்ணியமாகவும் விவேகமாகவும் செய்ய வேண்டும். சாப்பிடுவதற்கு ஏதாவது உணவை அல்லது அவர்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை அவர்களுடைய வீட்டிற்குக் கொண்டுபோய் உங்களால் கொடுக்க முடியுமா? ஒற்றைப் பெற்றோரோ அவருடைய பிள்ளைகளோ போட்டுக்கொள்வதற்கு உங்களிடம் துணிமணிகள் இருந்தால் அவர்களுக்குக் கொடுக்க முடியுமா? அல்லது, குடும்பத்திற்குத் தேவையான பொருள்கள் எதையாவது வாங்கிக்கொள்ள அவர்களுக்குப் பண உதவி அளிக்க முடியுமா?

வீட்டிற்கு அழைத்து உபசரியுங்கள்

வருடாந்தர பண்டிகைகளின்போது திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும்கூட மகிழ்ச்சியாய் இருப்பதற்காக அவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொள்ளும்படி இஸ்ரவேல் தேசத்தாருக்கு யெகோவா கட்டளையிட்டிருந்தார். சொல்லப்போனால், ‘நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டும்’ என்றே அவர் சொன்னார். (உபாகமம் 16:10-15) அவ்வாறே, கூடி மகிழ்வதற்காக “ஒருவரையொருவர் உபசரியுங்கள்” என இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் அறிவுரை கூறப்பட்டுள்ளது. (1 பேதுரு 4:9) அப்படியானால், ஓர் ஒற்றை-பெற்றோர் குடும்பத்தினரை உணவுக்காக உங்கள் வீட்டிற்கு அழைக்கலாம், அல்லவா? வகை வகையாய்ச் சமைத்துப் பரிமாற வேண்டியதில்லை. இயேசு ஒருமுறை தம் நண்பர்களுடைய வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றிருந்தபோது, “கொஞ்சம் இருந்தாலே போதும், ஒன்றே ஒன்றுகூடப் போதும்” என்றார்.—லூக்கா 10:42.

உங்கள் உதவியை மறக்க மாட்டார்கள்

“எந்த உதவியையும் எதிர்பார்க்காதீர்கள்; என்ன உதவி கிடைத்தாலும் நன்றியோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.” இந்த ஞானமான அறிவுரையை, ‘நான் மறக்கவே மாட்டேன்’ என்கிறார் கத்லின்; இவர் தனிமரமாய் மூன்று பிள்ளைகளை வளர்த்தெடுத்தவர். இவரைப் போலவே அநேக ஒற்றைப் பெற்றோர்கள் உணருகிறார்கள்; தங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தங்களுடையது என அவர்கள் நினைப்பதால், தாங்கள் செய்ய வேண்டியதை மற்றவர்கள் செய்யும்படி அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. இருந்தாலும், மற்றவர்கள் தங்களுக்கு ஏதாவது உதவி செய்தால் அதை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, ஒற்றைப் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருங்கள்; அவர்களும் சந்தோஷப்படுவார்கள், நீங்களும் ஆனந்தம் அடைவீர்கள். நீங்கள் “கொடுத்ததை [யெகோவா] திரும்பக் கொடுப்பார்” என்பதில் நம்பிக்கையாய் இருங்கள்.—நீதிமொழிகள் 19:17. (w10-E 12/01)

[அடிக்குறிப்பு]

a “ஒற்றைப் பெற்றோர்” என்ற சொற்றொடர் பைபிளில் காணப்படுவதில்லை; என்றாலும், “விதவை,” “திக்கற்ற பிள்ளை” என்ற பதங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. முற்காலத்திலும்கூட அநேக ஒற்றைப் பெற்றோர் இருந்ததை இது எடுத்துக்காட்டுகிறது.—ஏசாயா 1:17.

[பக்கம் 32-ன் படம்]

ஓர் ஒற்றை-பெற்றோர் குடும்பத்தாரை கடைசியாக எப்போது உங்கள் வீட்டிற்கு அழைத்து உபசரித்தீர்கள்? ஒருவேளை அப்படிச் செய்யாமல் இருந்தால் இப்போதே ஏன் அதைச் செய்யக் கூடாது?