மல்கியா 3:1-18

3  “இதோ, நான் என்னுடைய தூதுவரை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன்னால் போய் என் வழியைத் தயார்படுத்துவார்.+ நீங்கள் ஆர்வத்தோடு தேடுகிற உண்மையான எஜமான் திடீரென்று தன்னுடைய ஆலயத்துக்கு வருவார்.+ நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்கிற ஒப்பந்தத்தின் தூதுவரும் வருவார். அவர் நிச்சயமாக வருவார்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  “ஆனால், அவர் வரப்போகிற நாளை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்? அவருக்குமுன் யாரால் நிற்க முடியும்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும், சலவைக்காரரின் சலவைக்கட்டி போலவும் இருப்பாரே.+  அவர் புடமிடுகிறவரைப் போலவும், வெள்ளியைச் சுத்தப்படுத்துகிறவரைப் போலவும் உட்காருவார்.+ லேவியின் மகன்களை அவர் சுத்தப்படுத்துவார். தங்கத்தையும் வெள்ளியையும் புடமிடுவது போல அவர்களைப் புடமிடுவார். அதனால், அவர்கள் யெகோவாவுக்கு நீதியோடு காணிக்கை செலுத்தும் ஜனங்களாக ஆவார்கள்.  அப்போது யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும், முன்னோர்களின் காலத்தில் செலுத்தப்பட்ட காணிக்கைகளைப் போலவே யெகோவாவுக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.+  நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்காக நான் உங்களிடம் வருவேன். எனக்குப் பயந்து நடக்காத சூனியக்காரர்களுக்கும்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும்,+ கூலியாட்களை ஏமாற்றுகிறவர்களுக்கும்,+ விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* அடக்கி ஒடுக்குகிறவர்களுக்கும்,+ வேறு தேசத்து ஜனங்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கும்*+ எதிராகச் சாட்சி சொல்ல நான் வேகமாக வருவேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  “நான் யெகோவா; நான் மாறுவதில்லை.*+ நீங்கள் யாக்கோபின் பிள்ளைகள்; அதனால்தான், உங்களை அழிக்காமல் இன்னும் விட்டுவைத்திருக்கிறேன்.  உங்களுடைய முன்னோர்களின் காலத்திலிருந்தே நீங்கள் என்னுடைய விதிமுறைகளை மீறியிருக்கிறீர்கள்.+ என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். ஆனால், “நாங்கள் எப்படி உங்களிடம் திரும்பி வருவது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.  “ஒரு சாதாரண மனுஷன் கடவுளிடம் திருட* முடியுமா? ஆனால், நீங்கள் என்னிடம் திருடுகிறீர்கள்.” ஆனால், “நாங்கள் எப்படி உங்களிடம் திருடுகிறோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். “பத்திலொரு பாகத்தையும்* காணிக்கைகளையும் எனக்குக் கொடுக்காமல் வைத்துக்கொள்கிறீர்களே!  உங்களை நான் சபித்துவிட்டேன்.* ஏனென்றால், என்னிடம் திருடுகிறீர்கள். சொல்லப்போனால், உங்களுடைய மொத்த தேசமே என்னிடம் திருடுகிறது. 10  என்னுடைய ஆலயத்தில் எப்போதும் உணவு இருப்பதற்காக, நீங்கள் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகம்* முழுவதையும் அங்குள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டுவாருங்கள்.+ அப்போது, நான் வானத்தின் கதவுகளைத் திறந்து அளவில்லாத* ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிகிறேனா* இல்லையா என்று தயவுசெய்து என்னைச் சோதித்துப் பாருங்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 11  “நாசமாக்குகிறதை* நான் அதட்டுவேன். இனி உங்கள் தேசத்தின் விளைச்சலை அது நாசமாக்காது; உங்கள் திராட்சைத் தோட்டமும் கனிதராமல் போகாது”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 12  “மற்ற எல்லா தேசத்தாரும் உங்களைச் சந்தோஷமானவர்கள் என்று சொல்வார்கள்.+ நீங்கள் சந்தோஷம் தரும் தேசத்தாராக இருப்பீர்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 13  “கொஞ்சம்கூட உண்மை இல்லாத வார்த்தைகளை நீங்கள் எனக்கு எதிராகப் பேசினீர்கள்” என்று யெகோவா சொல்கிறார். ஆனால், “உங்களுக்கு எதிராக அப்படியென்ன பேசினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.+ 14  “‘கடவுளுக்குச் சேவை செய்வதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறீர்கள்.+ அதோடு, ‘பரலோகப் படைகளின் யெகோவா கொடுத்த பொறுப்புகளைச் செய்ததாலும் அவருக்குமுன் மனம் வருந்தி நடந்ததாலும் என்ன பலனைக் கண்டோம்? 15  அகங்காரம்* பிடித்தவர்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அக்கிரமம் செய்கிறவர்கள்தான் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். அவர்கள் துணிச்சலோடு கடவுளைச் சோதித்துப் பார்த்தாலும் தப்பித்துக்கொள்கிறார்கள்’+ என்று சொல்கிறீர்கள்.” 16  அப்போது, யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். யெகோவா அதைக் கவனித்துக் கேட்டார். யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக*+ ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது.+ 17  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “அவர்களை என்னுடைய விசேஷ சொத்தாக்குவேன்.+ அந்த நாளில் அவர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.+ கீழ்ப்படிந்து நடக்கிற ஒரு மகனுக்கு அப்பா கரிசனை காட்டுவது போல நான் அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்.+ 18  அப்போது, நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அநாதைகளையும்.”
வே.வா., “வேறு தேசத்து ஜனங்களுடைய உரிமைகளைப் பறிக்கிறவர்களுக்கும்.”
வே.வா., “நான் மாறவில்லை.”
இதற்கான எபிரெய வார்த்தை, ஒருவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருப்பதையும் குறிக்கும்.
வே.வா., “தசமபாகத்தையும்.”
அல்லது, “நீங்கள் என்னைச் சபிக்கிறீர்கள்.”
வே.வா., “தசமபாகம்.”
வே.வா., “போதும் போதும் என்கிற அளவுக்கு.”
வே.வா., “கொட்டுகிறேனா.”
அநேகமாக, பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளின் கூட்டத்தைக் குறிக்கலாம்.
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “தியானிக்கிறவர்களுக்காக.” அல்லது, “அவருடைய பெயரை உயர்வாக மதிக்கிறவர்களுக்காக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா